திங்கள், 9 ஜனவரி, 2017

தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் – 2009 பற்றிய தகவல்கள்.

2009 - க்கு முன்பு திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை 
அப்போது மூன்று வகையான திருமண பதிவுச் சட்டங்கள் இருந்தன.அவை 
1.இந்து திருமணச்சட்டம்
2.தனி திருமணச் சட்டம்.
3.கிறிஸ்துவ திருமணச் சட்டம்.
இந்த மூன்று வகையான சட்டங்களில் ஒன்றில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறையே 2009 -க்கு முன்பு வரை இருந்தது.
2009 - க்கு பிறகு, இந்த மூன்று வகை திருமண சட்டங்களில் ஏதேனும் ஒன்றில் திருமணத்தை பதிவு செய்தாலும் மீண்டும் தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் – 2009-ன்படி கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். 
ஆதலால் மேற் சொன்ன மூன்று வகையான திருமண பதிவுச்சட்டங்களில் பதிவு செய்வது அவசியம் இல்லாமல் போகிறது. 
எனவே தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் – 2009-ன் படி மட்டுமே திருமணங்களை பதிவு செய்தால் போதும் 

இத்திருமணங்களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.                   
தமிழ் நாடு திருமணச் சட்டம் – 2009ன் படி திருமணம் நடந்த 90 தினங்களுக்குள் திருமணத்தை பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று பதிவு செய்யவேண்டும்.                 
திருமணம் முடிந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் ரூ.100/- மட்டுமே.
திருமணம் முடிந்து 91 முதல் 150 நாட்களுக்குள் பதிவு செய்தால் அபராத கட்டணம் ரூ.50/-ம் சேர்த்து மொத்தம் ரூ.150/- செலுத்தவேண்டும்.

திருமணம் முடிந்து 150 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு திருமணச் சட்டம்-2009-ன்படி பதிவு செய்ய முடியாது.
150 நாட்களுக்கு பிறகும் பதிவு செய்யாதவர்கள் மீது அந்த பகுதி பதிவாளர் குற்ற நடவடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்ட விதி முறை வகுக்கப்பட்டுள்ளது. 
எனவே இனி திருமணம் செய்து கொள்ளும் அனைவரும் 90 நாட்களுக்குள் இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ளுங்கள்.
திருமணம் எங்கு நடந்ததோ அந்த பகுதிக்கான பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்ய முடியும். (மூன்று வகையான திருமணச் சட்டத்தில் திருமணம் நடந்த பகுதி பதிவாளர் அலுவலகம் அல்லது பெண் வீடு உள்ள பகுதி பதிவாளர் அலுவலகம் அல்லது மாப்பிள்ளை வீடு உள்ள பகுதி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளும் வகையில் விதி முறை உள்ளது).
திருமணத்தன்று ஆணுக்கு வயது 21-ம் பெண்ணுக்கு வயது 18-ம் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக கீழ்கண்ட ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.
திருமண பத்திரிக்கை.
கோவில்/சர்ச்/பள்ளிவாசல் நிர்வாகம் வழங்கிய திருமணம் நடந்ததாக கொடுக்கும் ஆவணம்.

திருமணம் நடந்ததிற்கான வேறு ஆதாரங்கள் (நோட்டரி அபிடிவிட், போன்ற ஆவணங்கள்)
முகவரிக்கான ஆதாரமாக கீழ்க்கண்ட ஒன்றில் ஏதேனும் ஒன்று கொடுக்கப்படவேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை
குடும்ப அட்டை
ஓட்டுனர் உரிமம்
பாஸ்போர்ட் அல்லது விசா

வயதுக்கான சான்றாக கீழ் கண்ட ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
பிறப்புச் சான்று, பள்ளி – கல்லூரிச் சான்று, பாஸ்போர்ட்/விசா

மூன்று சாட்சிகள் கையெழுத்திட வேண்டும். சாட்சிகள் ஏதேனும் ஒரு அடையாள அட்டை காண்பிக்க வேண்டும்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கணவன் -4, மனைவி 4 போட்டோக்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம்-2009-ன் படி பதிவு செய்யத் தனியாக விண்ணப்ப படிவம் உள்ளது. http://www.tnreginet.net/english/forms.asp என்ற இணைப்பிலிருந்து 4 பக்க விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருமணத்தை பதிவு செய்ய புரோக்கர்கள் ரூ5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வாங்கிக் கொள்கிறார்கள். ரூ.100/- மட்டும் செலுத்தி திருமணத்தை பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக